சத்துணவு முட்டை குறித்து பொய் மூட்டைகளை அவிழ்க்கிறார் மு.க.ஸ்டாலின்...முதல்வர் எடப்பாடியார் விளாசல்
சத்துணவு முட்டை உள்ளிட்ட விவகாரங்களில் தினந்தோறும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதாவது ஒரு பொய் தகவலை கூறிவருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடியுள்ளார்.
தூத்துக்குடி: தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும் அதிமுகவின் ஒரு தொண்டரை கூட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினால் தொட்டு பார்க்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ரூ. 389 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
உலகம் சுற்றும் வாலிபன்' படம் தடைகளை தாண்டி தூத்துக்குடியில் திரையிடப்பட்டது. போஸ்டர்கள் ஒட்டப்படாமலேயே மாபெரும் வெற்றி பெற்றது. சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டப்படும்.
2018-19-ம் ஆண்டில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது குடிநீர் திட்டம் ரூ. 282 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது.
முட்டை விவகாரத்தில் ஸ்டாலின் உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். சத்துணவில் முட்டை வழங்குவது ஒருநாளும் நிறுத்தப்படாது. பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்டாலின், அ.தி.மு.க.வின் ஒரு தொண்டனைக்கூட தொட்டுப்பார்க்க முடியாது.
தினமும் ஏதாவது ஒரு பொய்யை ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். வல்லநாடு அருகே அகரத்தில் தடுப்பணை கட்டப்படும். தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.26,932,35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.












Click it and Unblock the Notifications