எம்.ஜி.ஆரின் 99 - வது பிறந்த நாள் விழா: ஜெயலலிதா இன்று பங்கேற்பு
சென்னை: எம்.ஜி.ஆரின், 99 -வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தலைமைக் கழகம் வருகிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறார்.

அங்குள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 99-வது ஆண்டு பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிடுகிறார். தேர்தல் வர உள்ளதால், தொண்டர்கள் மத்தியில், அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரை வரவேற்க, கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு விவசாய பிரிவு மீனவர் பிரிவு மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications