அடுத்த வாரம் ராஜஸ்தான்ல இருந்து எங்க மாமா வராரு.. டெல்டா விளை நிலங்களிலும் புலம்பெயர் தொழிலாளிகள்
மயிலாடுதுறை: கட்டுமானம், உணவு, டெக்ஸ்டைல்ஸ் என்று புலம்பெயர் தொழிலாளிகள் இல்லாத துறைகள் மிகவும் குறைவு. அந்த வரிசையில் தென்னிந்தியாவின் உணவு களஞ்சியம் எனப்படும் காவிரி டெல்டாவில் விவசாய கூலி பணிகளுக்கும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து புலம் பெயர் தொழிலாளிகள் வரத்தொடங்கியுள்ளனர்.
பரிதாபங்கள் கோபி, சுதாகரின் புலம் பெயர் தொழிலாளிகளின் ரயில் வீடியோ செம வைரல் சம்பவம். அதில், நீங்க அதிக காசு கேட்கறீங்க. நான் 200 ரூபாய்க்கு பண்ணுவேன். என் பிரெண்ட் 150 ரூபாய்க்கு பண்றான். அடுத்த வாரம் எங்க மாமா வரார். அவர் 80 ரூபாய்க்கு பண்ணுவார். அவருக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று கட்டுமானத் துறை குறித்து கலாய்த்த வீடியோவை எல்லோரும் ரசித்திருப்போம். காமெடியை கடந்து அதில் உள்ள ஆழமான உண்மையுமே அந்த வீடியோ வைரலாக காரணமாக இருந்தது. கட்டுமானம், உணவு, டெக்ஸ்டைல்ஸ் என்று புலம்பெயர் தொழிலாளிகள் இல்லாத துறைகள் மிகவும் குறைவு. அந்த வரிசையில் தென்னிந்தியாவின் உணவு களஞ்சியம் எனப்படும் காவிரி டெல்டாவில் விவசாய கூலி பணிகளுக்கும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து புலம் பெயர் தொழிலாளிகள் வரத்தொடங்கியுள்ளனர்.

விவசாய நிலங்களில் பணியாற்ற ஆள் கிடைப்பதில்லை என்ற பிரச்னை சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆள்பற்றாக்குறை பிரச்னை காரணமாக புலம் பெயர் தொழிலாளிகள் காவிரி டெல்டாவின் விளை நிலங்களில் ஆங்காங்கே பணியாற்ற தொடங்கியுள்ளனர். இருந்தபோதும் இவர்களின் வருகையை தொழிற் சங்கங்களோ, உள்ளூர் தொழிலாளிகளோ எச்சரிக்கையாக எடுக்கவில்லை. மற்ற தொழில்துறையுடன் ஒப்பிடும்போது, வேளாண்துறையில் பணியாற்றுபவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது.
விவசாய நிலமுள்ள இளைய தலைமுறையினர் பலரும், அந்தத் துறையில் ஆர்வம் காட்டாமல் தங்கள் பெற்றோர் மீது சுமையை விட்டுச் செல்கின்றனர். பயிர்களை பராமரிக்க விவசாய பணியாளர்களை தேடி பணியமர்த்துவது மிகவும் கடினமாக உள்ளது என்கிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன்.
இதுகுறித்து டெல்டா விவசாயிகள் கூறுகையில், உற்பத்திக்கும், ஆள் பற்றாக்குறைக்குமான இந்த இடைவெளியை சில இடங்களில் புலம் பெயர் தொழிலாளிகள் நிரப்பத் தொடங்கியுள்ளனர். சீசன் காலகட்டங்களில் இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே விவசாய கூலிகளாக பணியாற்றுகின்றனர். முக்கியமாக டெல்டாவில் நடவு மற்றும் அறுவடைக்கான பணிகளுக்கு கைகொடுக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் மேற்க வங்கம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நெல் விவசாயம் உள்ளிட்ட அனைத்து விவசாய பணிகளிலும் திறன் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் வேலைகள் விரைவாக முடிவதுடன், கூலிக்கான செலவும் குறைகிறது என்றனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் கூறுகையில், எங்கள் குழு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தற்போது மயிலாடுதுறையில் நெல் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தினமும் சராசரியாக 4-5 ஏக்கர் பரப்பளவில் நடவு, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்கிறோம். எங்கள் குழுவில் மொத்தம் 13 பேர் இருக்கிறோம். நாங்கள் ஒரு நாளுக்கு ரூ.4,500 - 5,000 வாங்குகிறோம். இதுவே உள்ளூர் தொழிலாளிகள் ஒருவருக்கு தலா ரூ.600 கூலி கேட்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கூடுதலான நிலங்களில் பணியாற்றி, கூடுதல் தொகையும் பெற்றுக் கொள்வோம். விவசாயிகள், ஆள்பற்றாக்குறை பிரச்னையை எங்கள் மூலமாக தீர்வு பெற்று கொள்கிறார்கள். இருப்பினும் இது டெல்டாவில் பரவலாக செல்லவில்லை என்றார்.
இதை தொழிற்சங்கங்களும் ஒப்புக்கொள்கின்றன. அதே நேரத்தில் வட மாவட்டங்களில் விளை நிலங்களில் புலம் பெயர் தொழிலாளிகள் பணியாற்றுமளவுக்கு டெல்டாவில் இல்லை என்றும் கூறுகின்றனர். நகர்புற பகுதிகளில் மட்டுமே ஆங்காங்கே புலம் பெயர் தொழிலாளிகள் விவசாய பணிகளில் இறங்கியுள்ளனர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் காரணமாகவும் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சில விவசாயிகள் கூறுகின்றனர். கடந்தாண்டில் 100 நாள் வேலை என உறுதிகொடுத்துவிட்டு பல இடங்களில் 40 நாள்கள் மட்டுமே வேலை கொடுத்ததாக புகார் உள்ளது.
விவசாயிகள், கூலிகளுக்கு இடையேயான உறவில் சாதிய ரீதியான பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டு பேரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சில நேரங்களில் இது பிரச்னைக்கும் வழிவகுக்கிறது. மேலும் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் (47 சதவீதம்) உள்ளது. கிட்டத்தட்ட மக்கள் தொகையில் பாதி உயர்கல்வியை பயின்று அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடுகின்றனர். இதன் காரணமாகவும் அவர்களால் விவசாய பணிகளுக்கு திரும்ப முடிவதில்லை.












Click it and Unblock the Notifications