பால் ஊற்றும் அளவுபடியில் கூட தில்லுமுல்லு... பறிமுதல் செய்து அதிகாரி அதிரடி - வீடியோ
பால் ஊற்றும் படிகளின் அளவில் மாறுபாடு இருந்ததால், அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மதுரை: பால் அளந்து ஊற்றும் படிகளில் அளவு குறைந்த படிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் பால் அளந்து ஊற்றும் 250 மி.லி, 500 மி.லி, 1000 மி.லி படிகளில் அளவு சரியாக இல்லாமல் குறைந்த அளவுடைய படிகளில் பால் ஊற்றி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக மாவட்ட தொழிலாளர் ஆணையத்துக்குப் புகார் வந்தது.
அதையடுத்து, ஆணைய அதிகாரி சாந்தி மதுரையில் சில இடங்களைப் பார்வையிட்டு பால் ஊற்றும் படிகளின் அளவைப் பரிசோதித்தார். அந்தப் பரிசோதனையில் 250க்கும் மேற்பட்ட படிகளில் தவறான அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவற்றை அதிகாரி சாந்தி பறிமுதல் செய்தார்.
ஏற்கனவே காய்கறி எடை இயந்திரங்களில் இதுபோன்ற எடைக் குறைவு தவறுகள் நடப்பதாகப் புகார் எழுந்ததையடுத்து, அதிகாரி சாந்தி மதுரையின் காய்கறி சந்தைகளில் ஆய்வு செய்தார். அங்கும் தவறான எடை அளவுகளைக் கொண்ட இயந்திரங்களைப் பறிமுதல் செய்தார். இதனைத் தொடர்ந்து எடை இயந்திரம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகாரி சாந்தி ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.