இனிமேல் மின்கட்டணத்தையும் ஸ்வைப்பிங் கார்டில் செலுத்தலாம் - வந்தாச்சு புதிய வசதி
கார்டு மெஷின் மூலம் இனிமேல் மின்கட்டணங்கள் கட்டலாம். அலுவலகங்களில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : மின்கட்டணங்களை ஸ்வைப்பிங் கார்டுகள் மூலம் செலுத்தும் புதிய திட்டத்தினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் இன்று மின்கட்டணங்களை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ஸ்வைப்பிங் கருவி மூலம் கட்டுவதற்கான திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ' இப்போது எல்லா இடங்களிலும் கார்டு மெஷின் வந்துவிட்டது. மக்கள் அதற்கு எளிதாகப் பழகிவிட்டார்கள். மக்கள் எளிதில் பயன்படுத்தும் விதமாக மின்வாரிய இணையதளத்திலேயே கட்டணம் செலுத்தும் வசதி முன்பே வந்துவிட்டது.
அதுபோல தற்போது மின்சார அலுவலகங்களிலும் கார்டு மெஷின்களைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அலுவலகங்களுக்கும் கருவிகள் வழங்கப்பட்டு அதைப்பயன்படுத்தும் முறையும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
மேலும், தமிழகத்தில் தற்போது எங்கும் மின் தடை இல்லை. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் பேசி பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதுபோல மின் உற்பத்தியும் தேவையான அளவு இருக்கிறது.
கனமழை பெய்யும் நேரங்களில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நிலைமை சீரானதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும். இதை பொதுமக்கள் சிரமமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல, மழையை சமாளிக்க மின்சாரத்துறை போதுமான ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications