பரங்கிமலையை விழுங்கிய மகாதேவன் தெரியும்.. இமயமலையை விழுங்கிய மகாதேவன் தெரியுமா?.. அமைச்சர் விடுகதை
சென்னை: பரங்கிமலையை விழுங்கிய மகாதேவனை தெரியும், இமயமலையை விழுங்கிய மகாதேவனை தெரியுமா என அமைச்சர் ஜெயக்குமார் திமுக ஊழல் குறித்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள், அதிகாரிகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம்
ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 10 பேர் ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அது போல் மற்ற பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி
இவர் குரூப் 4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக தெரிகிறது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு விவகாரத்தில் ஏற்கெனவே வீரராஜ், பார்த்தசாரதி ஆகிய 2 வட்டாட்சியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

விடுவிப்பு
குரூப் 4 தரவரிசையில் 100 இடங்களுக்குள் வந்த 39 பேரில் சிலர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் முதன்மை தேர்வு அதிகாரிகளாக இருந்த தாசில்தார்கள் பார்த்த சாரதி, வீரராஜ் இருவரிடம் துருவி துருவி விசாரணை நடத்திய பின், முறைகேட்டில் தொடர்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து இருவரையும் சிபிசிஐடி போலீசார் விடுவித்தனர்.

ஊழல்
இன்னும் முக்கிய குற்றவாளிகளை போலீஸார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். இது நியாயமாகத் தேர்வு எழுதுவோர் மத்தியில் பெரும் வேதனையை அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முக ஸ்டாலின் முதலில் அவரது கட்சியினரின் ஊழலை திரும்பி பார்க்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி
சர்க்காரியா கமிஷன், பூச்சிமருந்து ஊழல், வீராணம் திட்டத்தில் முறைகேடு, சென்னையில் பாலங்கள் கட்டியதில் முறைகேடு என அனைத்துமே திமுக ஆட்சியில் நடைபெற்றது. விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் அவர்கள் கில்லாடிகள். இந்திய அளவில் 2ஜி ஊழல் நடத்தினர். பரங்கிமலையை விழுங்கிய மகாதேவனை பார்த்திருக்கிறோம். ஆனால் இமயமலையை விழுங்கிய மகாதேவன் திமுகதான். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications