விரக்தியில் பேசுறாரு.. பொன் ராதாகிருஷ்ணன் பேச்சை பெருசா எடுத்துக்காதீங்க.. ஜெயக்குமார் சுளீர் பதிலடி
சென்னை: தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருவதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறிய நிலையில் அதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அரியலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவருகிறது என்றும் இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டினார்.
தீவிரவாதிகள் விவகாரம் தொடர்பான தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே தான் கூறி வருவதாக பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.
பொன்.ராதா கேள்வி
தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்படுவது, இதை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும் பொன்.ராதா கேள்வி எழுப்பினார்
திமுக விளக்கம் தரணும்
சிறுபான்மையினர் வாக்குக்காக அரசியல்வாதிகள் கீழ்த்தரமான வேலையைச் செய்யத் தொடங்கியிருப்பதாகவும், தி.மு.க கூட்டணிக் கட்சிகளோடு இஸ்லாமியத் தீவிரவாதிகளும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார்.
பெருசா எடுத்துக்காதீங்க
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறிகையில் "பாஜக தலைவர் பதவி கிடைக்காத விரக்தியின் உச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அவரது கருத்தை பெரிதாக எடுத்துக்!கொள்ள தேவையில்லை" என்றார்.
மத்திய அரசு பாராட்டு
நல்லாட்சி நடப்பதாக தமிழக அரசை பாராட்டிய மத்திய அரசை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறாரா? மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
விரக்தியில் பேசுகிறார்
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக தலைவர் பதவி கிடைக்குமா கிடைக்காதா என்று தான் ஜோசியம் சொல்ல முடியாது என்று கூறிய ஜெயக்குமார் இங்கிருந்து ஒருவர் ஆளுநராக சென்ற விரக்தியில் இப்படி பேசுகிறார் என்றார்,