ஜெ. இறப்பு தேதி குறித்து முரண்பட்ட தகவல்... திவாகரனை கைது செய்ய அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
ஜெயலலிதா இறந்தது குறித்து முரண்பட்ட தகவலை அளித்த திவாகரனை கைது செய்ய அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல் தெரிவித்துள்ள திவாகரனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா கடந்தச 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 4-ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்துவிட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டார்.
5.15 மணிக்கே இறப்பு
அப்போது அவர் பேசுகையில் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார். ஆனால் அவரது மரண அறிவிப்பை மறுநாள் டிசம்பர் 5-ஆம் தேதிதான் அறிவிக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.
மருத்துவமனை மறைத்தது ஏன்
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து நான் கேட்ட போது தமிழகத்தில் எங்கள் மருத்துவமனையில் கிளைகள் ஏராளமாக உள்ளன. முதலில் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். பிறகு அறிவிக்கலாம் என்று கூறிவிட்டனர் என்று திவாகரன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தவறான தகவல்
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் கூறுகையில், ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் எதையும் கூறாமல் பொதுவெளியில் வெளியிடுவது தவறானதாகும்.
கைது செய்ய வேண்டும்
ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் வெளியிட்ட தகவல் முரணானது. அதேபோல் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிடுவது போன்ற செயல்களால் தினகரனும், திவாகரனும் மலிவான அரசியல் செய்கின்றனர். அவர்களை விசாரணை ஆணையம் தாமாக முன்வைத்து கைது செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.