சும்மா இருக்கும் ரஜினியை உசுப்பேத்தி விடாதீங்க- குருமூர்த்திக்கு ஜெயக்குமார் அட்வைஸ்
சும்மா இருக்கும் ரஜினியை உசுப்பேத்திவிடாதீர்கள் என்று ஆடிட்டர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: மோடியுடன் ரஜினி சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றி நிச்சயம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் சும்மா இருக்கும் ரஜினியை உசுப்பேத்திவிடாதீங்க என்றார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஃபிக்கி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் ஆடிட்டர் குருமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று செயல்பட்டால்தானே அதுகுறித்து கூறுவதற்கு.
நீட் குறித்து புரிதல் யாரிடமும் இல்லை. ரஜினி, கமல் ஆகியோருக்கு நான் ஆலோசனை சொல்லவில்லை. அதில் உண்மை இருந்தால் பெருமைப்படுவேன்.
தமிழக தேர்தல்களில்...
தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். கட்சிக்கு தலைமை உள்ளது , ஆனால் தமிழகத்துக்கு தலைமை இல்லை. மோடியிடம் நல்ல ஆளுமை உள்ளது, ரஜினியிடம் ஈர்ப்பு இருக்கிறது. எனவே இருவரும் இணைந்தால் தமிழக தேர்தல்களில் வெற்றி நிச்சயம்.
அமைச்சர் ஜெயக்குமார்
மோடியும் ரஜினியும் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கலாம் என்று கூறியிருந்தார் குருமூர்த்தி. இந்த கருத்துகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
நல்ல திட்டங்கள்
அப்போது ஜெயக்குமார் கூறுகையில் ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகக் கூடாது. குருமூர்த்தி முதலில் பட்ஜெட்டை படிக்க வேண்டும். அதன்பிறகு அவர் பேச வேண்டும். ஜெயலலிதா தொடங்கிய எத்தனையோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வெற்றிடம் இல்லாத நிலை
சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுப்பது போல் ரஜினியை குருமூர்த்தி கெடுக்கக் கூடாது. தமிழகத்தில் வெற்றிடம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. காமாலைக்காரனுக்கு எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.
உள்ளங்கை நெல்லிக்கனி
உச்சநீதிமன்ற தீர்ப்பை சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. காவிரி தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக உள்ளது. மாநில உரிமைக்காக அதிமுக அரசு நிச்சயமாக போராடும். டிடிவி தினகரன் குடும்பத்தினர் தமிழகத்தில் எப்படி சுவாகா செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்றார் ஜெயக்குமார்.