'அந்த' வார்த்தையை கூறியது தவறுதான்.. வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ !
கருணாநிதி குறித்து பேசியது தவறுதான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவில்பட்டி: கருணாநிதி குறித்து பேசியது தவறுதான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக கட்சி தொண்டர்களிடையே பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார்.
5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோதே இறந்திருந்தால், அரசு மரியாதை கிடைத்து இருக்கும் எனவும், ஆனால் தற்போது அரசு மரியாதை கிடைத்து இருக்கிறது என்றால் அது அதிமுக போட்ட பிச்சை என கூறினார்.
ஏற்க முடியாது
அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பிச்சை என்பதை ஏற்க முடியாது என்றார். ஆட்சியே மக்கள் போட்ட பிச்சை தான் . அமைச்சர் இவ்வாறு கூறியதை ஏற்க முடியாது என கூறினார் பொன் ராதாகிருஷ்ணன்.
வாதாடிதானே பெற்றோம்
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கருணாநிதிக்கு மெரினாவில் அரசு ஒதுக்கியிருந்தால் பிச்சை என எடுத்துக்கொள்ளலாம், நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி தானே மெரினாவில் இடத்தை பெற்றோம்.
கண்டனம்
அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் பற்றி தெரியாத ஒரு அமைச்சர் இப்படி கண்ணியம் இழந்து கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல என்றார். செல்வாக்கு இல்லாத அமைச்சர் கருணாநிதி குறித்து பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
அமைச்சர் வருத்தம்
இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ , கருணாநிதி பற்றி பேசியது தவறு தான் என வருத்தம் தெரிவித்தார்.
திமுகவினர் பேசியதால்
மேலும் அவர் கூறியதாவது, ஜெயலலிதா நினைவிடம் குறித்து தி.மு.க.வினர் பேசியதால் தான் அதனை தெரிவித்ததேன். தி.முக.வினர் தான் கீழ்தரமான அரசியல் செய்வார்கள்.
விளங்கியதாக சரித்திரம் இல்லை
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் விளங்கியதாக சரித்திரம் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.