கேன் வாட்டர் தரமானதா? “ரெய்டு நடத்துங்க”.. அதிகாரிகளுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை : கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர் தரமான முறையில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
குடிநீர், பாட்டில்கள், கேன்கள் என வெவ்வேறு அளவுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. தற்போது கோடைகாலம் நிலவுவதால் தண்ணீர் கேன்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. பல நோய்கள் சுகாதாரமற்ற குடிநீரால் பரவுவதால், சுத்தமான குடிநீரை பருகுவது அவசியமாகிறது. இந்நிலையில் கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் தண்ணீர் தரமான முறையில் கிடைக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.

அமைச்சர் ஆர்டர் : இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 45 சுகாதார மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் தண்ணீரின் தேவை பெரிதும் அதிகரிக்கும். கேன் வாட்டர் விற்பனை பரவலாக காணப்படும் சூழலில், அதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பழங்களை பழுக்க வைக்க ரசாயனங்கள்: மேலும் பழங்கள் செயற்கை முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படுகின்றன. இதை உரிய முறையில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளை தொடர்ந்து கண்காணித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இதேபோல் குளிர் பானங்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.

மேலும், தடை விதிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் இவற்றுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே அங்கிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.
ரயில்கள், காய்கறி லாரிகள் மூலமும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே தீவிரமாக கண்காணித்து சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் திடீர் ரெய்டுகளை நடத்தி அவற்றை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தரமற்ற குடிநீர் கேன்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில் அமைச்சரின் இந்த உத்தரவு ஆறுதல் அளிக்கிறது.












Click it and Unblock the Notifications