மழை வெள்ள மீட்பு, சேத ஆய்வு.. வேட்டியை மடித்துக் கொண்டு களம் இறங்கிய அமைச்சர், மேயர்!
சென்னை: சென்னையில் விடாமல் பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கும் பணியில் அமைச்சர்கள் இறங்கியுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது சென்னையில். நகரின் எந்தப் பக்கம் திரும்பினாலும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் ஜாமீன் விவகாரம் தொடர்பாக எந்த அமைச்சரையும் சென்னையில் காண முடியவில்லை.
இன்றுதான் அமைச்சர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். கூடவே சென்னை மாநகராட்சி மேயரும் களம் குதித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் டி.கே.எம் சின்னையா, தொகுதி எம்.எல்.ஏ. கே.பி. கந்தன், மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் இன்று நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். விரைவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர் ஆகியோர் பார்வையிட்டு மக்களுக்கு விமோச்சனம் கிடைக்க வழி செய்தால் நலமாக இருக்கும்.
முதல் மழையிலேயே சென்னை நாஸ்தியாகி விட்டது. மழை நீர் வடிகால்களை மழைக்கு முன்பே சுத்தம் செய்யாததால் வந்த வினை இது. வழக்கமாக வருடா வருடம் இதே போல புலம்பிக்கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் தொடர்ந்து இப்படியேதான் இருக்கிறது நிலை.