ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த முதலாவது அமைச்சர்.. மாஃபா பாண்டியராஜன்!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிபடுத்தியுள்ளார்.
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பண்டியராஜன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிபடுத்தியுள்ளார். முதன்முறையாக அமைச்சரே நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் சசிகலா பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அம்மாவின் ஆன்மா எம்எல்ஏக்களின் மனச்சாட்சியை உசுப்பும் என்று கூறி நம்பிக்கையுடன் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

இளைஞர்கள், அதிமுக தொண்டர்கள், மாணவர்கள் என பெரும்பாலோனோர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், முதல்வர் ஓபிஎஸ் எடுத்துள்ள சந்தர்ப்பவாதம் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இன்று தனது டுவிட்டர் பதிவில் வாக்காளர்களின் ஒட்டு மொத்த குரலுக்கும் முக்கியத்துவம் தருவேன் என்றும் ஜெயலலிதா வலியுறுத்திய ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் என்று கூறியுள்ளார். மக்கள், தொண்டர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பேன் என்றும் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.
இதற்கு அவரை பின்பற்றுபவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். விரைவில் நல்ல முடிவாக எடுங்கள் என்று பதில் பதிவிட்டுள்ளனர். இந்தநிலையில் விரைவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை மாஃபா பாண்டியராஜன் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை வெளிப்படையாக உறுதிபடுத்தியுள்ளார். முதன்முறையாக அமைச்சர் ஒருவரே நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இன்னும் சில அமைச்சர்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் ஓபிஎஸ்ஐ ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தனது தொகுதி வாக்காளர்களின் கோரிக்கையை ஏற்று வந்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்.
முன்னதாக வாக்காளர்களின் எண்ணங்களை கேட்டு, அதிமுகவின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பேன் என டுவிட்டரில் கூறியிருந்ததோடு தற்போது முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications