அப்பா வெளிநாட்டில்.. ஆக்டிங் மா.செவாக செயல்படும் அமைச்சர் மகன்.. பக்கத்து மாவட்டம் வரை குமுறலா?!
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ஆர்.காந்தி, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதால், அவரது மகன் வினோத் ஆக்டிங் மா.செவாகவே செயல்பட்டு வருகிறாராம்.
ஏற்கனவே, அமைச்சர் காந்தியின் மகன், மாவட்ட அரசியலில் அதிகம் தலையிடுவதாக லோக்கல் நிர்வாகிகள் மத்தியில் புகார்கள் இருந்து வந்த நிலையில், தற்போது மாவட்ட செயலாளர் போலவே செயல்பட்டு வருவதாக குமுறல்கள் எழுந்துள்ளன.
கட்சி கூட்டங்களில் பங்கேற்பது, கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசுவது என வினோத், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், வேலூர் மாவட்டத்திலும் அதிகாரம் செலுத்தி வருவதால் திமுகவினரிடையே சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில் திருக்குளம் பூமி பூஜை
ஜப்பான் சென்ற அமைச்சர்
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி, ஜப்பான் சென்றுள்ளார். அங்கு நடந்து வரும், ஜப்பான் டெக்ஸ் - 2022 இன்டீரியர் டிரெண்ட் ஷோ என்ற துணி நுால் தொடர்பான பிரத்யேக கண்காட்சியில் பங்கேற்பதற்காக டோக்கியோ சென்றார் அமைச்சர் காந்தி. அவருடன் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவுமான நந்தகுமாரும் சென்றுள்ளார்.
ஆக்டிங் மா.செ
ஜப்பான் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக அதிகாரிகளுடன் மீட்டிங், துறை ரீதியான நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கிறார் அமைச்சர் காந்தி. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காந்தியும், வேலூர் மாவட்ட செயலாளரான அணைக்கட்டு நந்தகுமாரும் ஜப்பான் கிளம்பியது முதல், இரண்டு மாவட்டங்களுக்கும் ஆக்டிங் மா.செவாக செயல்படத் தொடங்கியுள்ளாராம் அமைச்சர் காந்தியின் மகன் வினோத்.
மாநில பதவி
அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார். கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத காலத்திலேயே கட்சியில் அதிகமாகத் தலையிட்டு வந்த வினோத்துக்கு கடந்த ஆண்டு தி.மு.கவில் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதல் அரசியலில் இன்னும் தீவிரம் காட்டி வருகிறாராம். எனினும், மாவட்ட அரசியலில் தான் அவரது கவனமெல்லாம் இருக்கிறது என்கிறார்கள்.
2 மாவட்டங்களில் வேகம்
இந்நிலையில் தான், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரான தனது தந்தை காந்தியும், வேலூர் மா.செ நந்தகுமாரும் ஜப்பான் சென்ற நிலையில், இரண்டு மாவட்டங்களுக்கும் நிழல் மாவட்ட செயலாளரைப் போல செயல்படத் தொடங்கிவிட்டாராம் வினோத். கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு கொடுப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நிர்வாகிகளை அழைத்துப் பேசுவது அதிரடி காட்டி வருகிறாராம்.
பொறுமும் சீனியர்கள்
ஏற்கனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் வினோத்தின் தலையீடு பெரிதாக இருந்ததாக மூத்த நிர்வாகிகள் பலர் அப்போதே கொந்தளித்தனர். இப்போது, மாவட்ட செயலாளர் போலவே வினோத் நடந்து கொண்டு வருவதால் மாவட்டத்தின் சீனியர் நிர்வாகிகள் பலரும் பொறுமி வருகின்றனராம்.
பக்கத்து மாவட்டத்தில்
பக்கத்து மாவட்டத்தின் பக்கமும் வினோத்தின் தலை தென்படுவதால் அம்மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சரின் ஆதரவாளர்களும் கொதித்துப் போயுள்ளனராம். அமைச்சர் நாடு திரும்புவதற்குள் பஞ்சாயத்து பெரிதாகி தலைமை வரை சென்றுவிடுமோ என்ற அச்சமும் வெளிநாடு சென்றுள்ள அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாம்.