விஜயேந்திரர் எழாததை விட செல்லூர் ராஜு பேச்சுதான் ஷாக்கிங்கா இருக்கு!
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சப்பைக்கட்டு கட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு ஆதரவாக அமைச்சர் செல்லூர் ராஜூ சப்பைக்கட்டு கட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி. அப்போது இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நிற்க விஜயேந்திர சரஸ்வதி மட்டும் அப்படியே உட்காந்திருந்தார்.
இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மண்டியிட்டு மன்னிப்பு கேள்
அவரது கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டு வருகிறது. தமிழை அவமதித்த விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அமைச்சர் ஆதரவு
விஜயேந்திரரால் தமிழகமே அல்லோகல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயேந்திரர் எந்த தவறும் செய்யவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தாக்கத்தை ஏற்படுத்தும்
தமிழக அரசின் முக்கிய அமைச்சர் ஒருவரே தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காததை ஆதரித்துப் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு அமைச்சர் ஆதரவு தெரிவித்திருப்பது தமிழக அளவில் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அரசு என்ன செய்யும்?
அமைச்சரின் இந்த பேச்சால் நாளை பலரும் இதுபோல தமிழ்த் தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காமல் அலட்சியப்படுத்த, அவமானப்படுத்த முனையக் கூடும். அப்போது தமிழக அரசு அதனை தடுக்க என்ன செய்யும்?

தடைவிதிக்குமா?
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காதவர்களுக்கு அபராதம் வசூலிக்குமா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது பிரச்சனையே வேண்டாம் என தமிழ்த்தாய் வாழ்த்துக்கே தடைவிதிக்குமா?

அமைச்சர் பேச்சு நியாயமா?
இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க இப்போதே திடமான நடவடிக்கையை எடுப்பதுதானே அரசின் வேலை. அதைவிட்டு விட்டு மக்களை வழிநடத்தக்கூடிய அமைச்சர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஒருவருக்கு ஆதரவாக பேசுவது நியாயமா?

தவறாக நினைக்க மாட்டார்களா..?
தமிழகத்தின் மிக மிக முக்கியமான, பொறுப்பான, புத்திசாலியான அமைச்சர் செல்லூர் ராஜு. அமைச்சர் செல்லூர் ராஜூவின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அவரே இப்படி அவமதிப்புக்கு ஆதரவாக பேசினால் மக்கள் தவறாக நினைக்க மாட்டார்களா..?












Click it and Unblock the Notifications