சிறந்த மதிப்பெண் பெற்றவர்களின் விளம்பர பேனர் வைக்க கூடாது: செங்கோட்டையன் எச்சரிக்கை
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தனியார் பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் விளம்பர பேனர்கள் வைக்கப்படக்கூடாது என்றும் மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும் 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள 87.7சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆகவே வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது:
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், நாளை முதல் மே 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு தேவைப்படுவோர் விடைத்தாள் நகல் பெற்றபின்புதான் மறுமதிப்பீடுக்கும் மறுகூட்டலுக்கும் விண்ணக்க வேண்டும்.
அதுவரை விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
நடந்து முடிந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்கள், மற்றும் இந்த தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25-ம் தேதி சிறப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது.
தனியார் பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் புகைப்படத்துடன் விளம்பர பேனர்கள் வைக்கப்படக்கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியாகிஉள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மனம் தள வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.