தம்பித்துரைக்கு நிறைய வாக்கு வாங்கிக் கொடுத்தா தங்கச் செயின் தர்றேன்... அமைச்சர் தரும் 'ஆஃபர்'!
கடவூர்: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிற்கும் தம்பிதுரைக்கு அதிக அளவில் வாக்குகளை வாங்கி கொடுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
கரூர் அதிமுக வேட்பாளராக, அதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், தற்போதைய கரூர் எ.ம்பியுமான தம்பிதுரையை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவி்த்தார்.
மேலும், கரூர் தொகுதி பொருப்பளராக தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கரூர் மாவட்ட செயலாளர் பதவியிலும் செந்தில் பாலாஜியே உள்ளார். இதனால் தம்பிதுரையை கரை சேர்த்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் செந்தில் பாலாஜி சிக்கியுள்ளார்.

எதிர்ப்பு அதிகம்
ஆனால், வாக்கு கேட்டு தம்பிதுரை செல்லும் பெரும்பாலான இடங்களில் அவருக்கு எதிர்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் செந்தில் பாலாஜி
இந்த நிலையில், அதிமுக வேட்பாளரையும், நிர்வாகிகளையும் மகிழச்சி கடலில் ஆழ்த்தும் விதமாக, அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடவூர் கூட்டத்தி்ல் கலகல அறிவிப்பு
கடவூர் ஒன்றிய செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் தரகம்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு அருமையான ஆஃபரை அதிமுகவினருக்காக அறிவித்தார்.

இங்கு பார்த்த கூட்டம் எங்கும் இல்லையே
அங்கு செந்தில் பாலாஜி பேசுகையில்,கரூர் தொகுதி என்றாலே அதிக ஓட்டுக்கள் பெற்று தருவது கடவூர் ஒன்றியம் தான். இங்கு பார்க்கும் கூட்டத்தை பார்த்தால் இது செயல்வீரர்கள் கூட்டம் இல்லை, வெற்றி பெற்றதற்கான எழுச்சி கூட்டம்.

தங்கச் சங்கிலி பரிசு தருவேன்
தொகுதியில் எந்த வாக்குசாவடியில் அதிக ஓட்டுக்களை பெறுகிறதோ அதற்குரிய அதிமுக நிர்வாகிக்கு முதல் பரிசு 3 பவுன் தங்க செயின், 2 ம் பரிசு 2 பவுன், 3 ம் பரிசு ஒரு பவுன் தங்க செயின் வழங்கப்படும் என அறிவித்தார்.

அடடே.. செயின் தருவாராமே...
தேர்தலில் அதிக ஓட்டுக்கள் பெறும் வாக்குச்சாவடிகளுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளதால், அதிமுகவினர் மத்தியில் ஒருவித போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விறுவிறுப்பாக செயல்பட்டு வாக்குகளை அள்ளி சங்கிலியைக் கைப்பற்றும் முனைப்புடன் அனைவரும் வாக்குகளைக் கவரும் போட்டியில் குதித்துள்ளனராம்.

இது கள்ளாட்டம்.. திமுக புகார்
ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் விதிமுறைகளை மீறி எப்படி இப்படி கூறலாம் என திமுகவினர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications