அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60ம் கல்யாணம்.. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் எளிமையாக நடந்தது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60ம் கல்யாணம் சஷ்டியப்தபூர்த்தி விழா நடைபெற்றது. சஷ்டியப்தபூர்த்தி யாகத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது மனைவி சாந்தி பங்கேற்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு மிகுந்த இறை பக்தி கொண்டவர். முதல்வர் மு.க ஸ்டாலினின் குட் புக்கில் இருக்கும் அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அத்துறைக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு ஏராளமான பணிகளை அது செய்து வருகிறார். மகாசிவராத்திரி திருவிழா, ஆடி மாதம் அம்மன் கோவில் சுற்றுலா, ரட்டாசி மாதம் பெருமாள் கோவில்கள் சுற்றுலா என பல சிறப்பான திட்டங்களை அறிவித்து மக்களின் குட்புக்கில் இடம்பிடித்துள்ளார் சேகர்பாபு.

இதனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.கே.சேகர் பாபுவை ஆன்மீகவாதிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். திருக்கோவில் அறப் பணிகள், திருக்கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு, கும்பாபிஷேகங்கள் என அனைத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார் பி.கே.சேகர்பாபு. அமைச்சர் சேகர்பாபுவுக்கு தற்போது 60 வயதாகிறது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு சஷ்டியப்தபூர்த்தி விழா நடைபெற்றது. இதற்காக கோவிலுக்கு நேற்று மாலை குடும்பத்தினருடன் அமைச்சர் சேகர் பாபு வருகை தந்தார். இன்று காலை நடைபெற்ற சஷ்டியப்தபூர்த்தி யாகத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது மனைவி சாந்தி பங்கேற்றனர்.

அப்போது, வேத மந்திரங்கள் ஓத தனது மனைவி சாந்தி கழுத்தில் சேகர்பாபு திருமாங்கல்யம் அணிவித்தார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் தருமபுரம் ஆதீனம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பலரும் சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
குறிப்பாக 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தியும், 70ம் வயதில் பீமரத சாந்தியும், 80வது வயதில் சதாபிஷேகம் செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று ஐதீகம் உண்டு. இதனால் பலரும் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இந்த கோவிலில் தான் சதாபிஷேகம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications