12 மணி நேரம் வேலை! கூட்டணியில் குழப்பம்.. ஸ்டாலின் நிலைப்பாடு என்ன? அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8லிருந்து 12 மணி நேரமாக மாற்றும் மசோதா சட்டமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் 8 மணி நேரம் என்பது தொழிலாளர்களின் அடிப்படை சட்டம். இப்படி இருக்கையில் இந்தியாவில் 9 மணி நேரம் 47 நிமிடங்கள் வேலை செய்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பாஜக அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற வழி வகுக்கிறது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இப்படி இருக்கையில் கடந்த 21ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் விரும்பினால் தொழிலாளர்களுடன் கலந்துபேசி அவர்களின் ஒப்புதலோடு வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறுகிறது. அதாவது வாரத்திற்கு அனைத்து தொழிலாளர்களும் 48 மணி நேரம் (6*48) வேலை செய்ய வேண்டும் என்பது சட்டம். இந்த புதிய சட்ட திருத்தத்தின் படி 4 நாட்கள் 12 மணி நேரம் (4*12=48) வேலை செய்யலாம். மீதமுள்ள மூன்று நாட்கள் விடுமுறை. ஆனால் நிறுவனங்கள் விருப்பப்பட்டால் கூடுதலாக கூட வேலை நாட்களை நீடிக்கலாம்.
இதற்கு தொழிலாளர்களின் ஒப்புதல் அவசியம். அதேபோல இந்த கூடுதல் நாட்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட வேண்டும். என்று இந்த சட்டம் அனுமதியளிக்கிறது. இதனை திமுகவின் கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இடதுசாரிகள் போராட்டங்களை நடத்த தொடங்கிவிட்டனர். இது குறித்து தொழிற்சங்கங்கள் கூறுகையில், "வாரத்திற்கு 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை என்கிறார்கள். தொழிலாளர்கள் விருப்பம் இருந்தால் 5வது நாள் வேலை இருக்கும் என்கிறார்கள். இங்குதான் சிக்கல். 5வது நாள் வேலை இருக்கிறது என்று நிறுவனங்கள் சொல்லும்போது அதை ஏற்காத தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவார்கள்.

மட்டுமல்லாது உலக நாடுகள் பல வேலை நேரத்தை குறைத்தக்கொண்டிருக்கின்றன. இதனால் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது. 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் 4 ஷிப்ட் இருக்கிறது எனில் வேலை நேரத்தை குறைப்பதன் மூலமாக கூடுதலாக ஷிப்ட் உருவாகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் 12 மணி நேரமாக வேலை அதிகரிக்கும்போது ஷிப்ட் குறைகிறது. வேலையின்மை அதிகரிக்கிறது. அதேபோல 8 மணி நேரம் வேலை என்பது போராடி பெற்ற உரிமை. அதை இதுபோன்ற சட்ட திருத்தங்களால் மாற்ற முடியாது" என்று கூறியுள்ளன. இப்படி இருக்கையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "12 மணி நேரம் வேலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார்" என்று கூறியுள்ளார்.
அதாவது, "முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நாளை அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்த சட்ட மசோதா தொடர்பாக யாரும் எதிர்பார்க்காத முடிவை முதலமைச்சர் எடுப்பார். எனவே தொழிலாளர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம்" என்று கூறியுள்ளார். நாளை (ஏப்.24) தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications