தர்மபுரி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்
பச்சிளம்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவைப் பொறுத்தவரை அங்கு முறையான பயிற்சியும் அனுபவமும் மிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிகின்றார்கள். இங்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எந்தவொரு தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுபவம் இல்லாத மருத்துவர்களோ, செவிலியர்களோ பணிபுரிகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்நிலையில், சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மனதை புண்படுத்தும்வகையில் அறிக்கை தருவது, அறிக்கை தருபவர்களின் அனுபவமின்மையை காட்டுகிறது. மருத்துவ துறை என்பது மகத்தான சேவை துறை ஆகும். இந்த சேவை குறித்து வெற்று அறிக்கைகள் மூலம் அரசியலாக்கி யாரும் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். 15.11.2014 முதல் இன்றைய தேதி வரை இம்மையத்தில் 101 பச்சிளம்குழந்தைகள் முழுமையான மருத்துவ சிகிச்சைக்குப் பின் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியுள்ளனர். சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள மருத்துவர்கள் குழுவும், மருத்துவக் கல்வி இயக்குநரும் தொடர்ந்து அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்'' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.