சிசு மரணம் குறைந்து வருகிறது
இந்த மையங்கள் துவங்குவதற்கு முன்பாக உயர் சிகிச்சைக்கு வழியின்றி இருந்த நிலமையை மாற்றி, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, பச்சிளங்குழந்தைகளை காப்பாற்றுகின்ற உயர் சிகிச்சை மையங்கள் தான் இந்த 24 x 7 மணி நேரமும் செயல்படும் பச்சிளங்குழயதைகள் தீவிர சிகிச்சை மையங்கள் ஆகும். இவை மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளில் பிரசவித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இத்தகைய குழந்தைகளைக் கடைசி நேரத்தில் தாங்கிப் பிடிக்கும் கரங்களாக இந்த மையங்கள் செயல்படுகின்றன. இதன் பயனாக இறக்கும் நிலையில் வரும் பச்சிளம் குழந்தைகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் காரணமாக சிசு மரண விதிகம் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில், இந்த மருத்துவமனை மட்டும் அல்லாது, மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் இதர மாவட்டங்களிலிருந்தும் பச்சிளம்குழந்தைகள் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றன.
சிசு இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை ஒரு மாவட்டத்திலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவின் இறப்பு விகிதத்தை மட்டும் தனியாக கணக்கீடு செய்வது ஒரு தவறான கணக்கீட்டு முறையாகும். ஏனென்றால், சிசு மரண விகிதம் ஒரு பகுதியில் உள்ள குறியீடாகுமே தவிர ஒவ்வொரு மருத்துவமனையின் குறியீடு அல்ல.
உலகளாவிய நிகழ்வு :
பிரசவத்தின்போது சிசு மரணம் என்பது உலகளாவிய நிகழ்வு. வளர்ந்த மேலைநாடுகளில் எல்லாம் கூட இது தவிர்க்க முடியாததாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தில், 2006ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் 3353 சிசு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு வருடத்தில் 671 சிசு மரணங்கள் நிகழ்ந்தன. அதாவது, சராசரியாக மாதம் ஒன்றுக்கு 56 சிசு மரணங்கள் நிகழ்ந்தன. 2011ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை 1834 சிசுக்கள் இறந்துள்ளன.
அதாவது, கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 512 ஆகவும், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 42 ஆக குறைந்துள்ளன. சிசு மரணம் என்பது மனதிற்கு வேதனையளிக்கும் நிகழ்வாகும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களால் இயன்ற வரை இறுதிவரை போராடியும், தவிர்க்க இயலாத தருணங்களில் இறப்பு நிகழ்கின்றது. இருப்பினும், சிசு மரண விகிதத்தை மேலும் குறைக்க அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், தருமபுரி மாவட்டத்தில், 2006ல் 30 ஆக இருந்த சிசு மரண விகிதம், தற்போது 18.9 ஆக குறைந்துள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 186 மருத்துவர்கள், 243 செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது பச்சிளம்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் 30 செவிலியர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்தப் பிரிவுக்கு பல்வேறு காரணங்களால் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளைப் பொறுத்து தேவைக்கேற்ப இம்மருத்துவமனையில் 45 வார்மர்கள், 10 போட்டோதெரபி மற்றும் 20 வென்டிலேட்டர்கள் வசதி உள்ளது. மேலும் 3 வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்கூடிய அவசர ஊர்திகளும் அம்மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மையம், கடந்த 2012-13ம் ஆண்டில் சிறப்பான மையத்திற்கான விருதைப் பெற்று சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.