தாய் - சேய் நலன்...
தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் தாய் சேய் நலனில் அரசு மருத்துவ நிலையங்களின் பங்கு மிகவும் சிறப்பாக இருப்பதன் காரணமாகத் தான், நாளொன்றுக்கு 1800க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவ நிலையங்களில் பிறக்கின்றன.
உண்மைநிலை இவ்வாறிருக்க, ஏதோ தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், அரசு சுகாதார நிலையங்கள் சரியாக செயல்படவில்லை என்றும் தவறான அறிக்கைகளை சிலர் பத்திரிகைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் சிசு மரண விகிதம் 40 ஆக இருக்க, தமிழ்நாடு ஏற்கனவே சிசு மரண விகிதத்தில் 21 என்ற நிலையை எட்டி பெரிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக தாய் சேய் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணத்தினால் 99.8 விழுக்காடு தாய்மார்களின் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு திட்டம் :
நாளொன்றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நல்லமுறையில் பிறந்தாலும், பல காரணங்களினால் ஒரு சில நேர்வுகளில் பிரசவத்திற்குப் பின்பு உயிருக்குப் போராடும் நிலையில் சில குழந்தைகள் பிறக்கின்றன. இத்தகைய பச்சிளம் குழந்தைகளைக் காப்பதற்கென ஏற்படுத்திய குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு திட்டம் என்பது ஒரு மகத்தான திட்டம். இத்திட்டத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல், குறைகூறும் வகையில் பலர் அங்கு ஏற்படும் இறப்பைக் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
ஆரோக்கியமான பிரசவங்கள் நடக்கும்போது பிரசவம் முடிந்தவுடன் மருத்துவமனையை விட்டு தாய்மார்கள் குழந்தையுடன் சென்று விடுகின்றனர். ஆனால் குறை மாத பிரசவம், பிறவி குறைபாடு, பிரசவத்தின்போது குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், வலிப்பு, முக்கிய உறுப்புகள் முதிர்ச்சி அடையாத நிலையில் பிறக்கும் எடை குறைந்த குழந்தைகள், குவளைநீரால் புரையேறுதல், தொப்புள்கொடி கழுத்தைச் சுற்றிக்கொள்ளும் நேர்வுகள், கருப்பையில் வளர்ச்சி குன்றிய குழந்தை மற்றும் இதர காரணங்களினால் உயிருக்குப் போராடும் நிலையில் சில பிரசவங்கள் நிகழ்கின்றன.
இப்படி பிறக்கும் சிசுக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் தமிழகத்தில் 64 பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 114 பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவு போன்ற மையங்கள் நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே சுட்டிக்காட்டியவாறு, பல்வேறு காரணங்களினால் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தீவிர சிசிக்சை அளிப்பதற்காகத்தான் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications