அமைச்சர் உதயநிதியிடம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் காட்டிய கல்வெட்டு.. தாத்தா பற்றி நெகிழ்ச்சி!
சிவகங்கை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம் குன்றக்குடிக்குச் சென்று பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்தார். அப்போது, குன்றக்குடி அடிகளார் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை உதயநிதி ஸ்டாலினிடம் காட்டி நினைவுகளைப் பகிர்ந்தார் அடிகளார்.

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் மற்றும் திருமண விழாக்களில் பங்கேற்க வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திராவிட இயக்கத்துடன் எப்போதும் நெருக்கமாக பயணித்த குன்றக்குடி அடிகளாரின் மணிமண்டபத்தில் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது, குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டியதையும் பணிகளை முடித்து அவரே திறந்து வைத்தற்கான கல்வெட்டையும் பொன்னம்பல அடிகளார் சுட்டிக்காட்டி விளக்கினார். அங்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் குன்றக்குடி அடிகளாருடன் உள்ள புகைப்படங்களைக் காட்டி விளக்கினார் பொன்னம்பல அடிகளார்.

குன்றக்குடி அடிகளாருக்கும், தனது தாத்தா கருணாநிதிக்கும் இடையே இருந்த நெருக்கமான நட்பு குறித்து பொன்னம்பல அடிகளார் அங்கிருந்த புகைப்படங்களைக் காட்டி விளக்கியதை ஆச்சரியத்தோடு கேட்டறிந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

அமைச்சராக பொறுப்பேற்றபோது உதயநிதி ஸ்டாலினுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாழ்த்து தெரிவித்துதார். கலைஞர் காட்டிய தடத்தில் சகோதரர் உதயநிதியை அமைச்சராக்கி இருப்பது தமிழ்நாடு பெற்ற பெரு மகிழ்வுக்குரிய செய்தி. கலைஞரின் சிந்தனைத் தடத்தில் முதல்வர் ஸ்டாலினின் செயல் திறமையை போல அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications