அதிமுகவில் வளர்மதி அதிரடி.. திமுகவில் கு.க.செல்வம் சரவெடி.. அனல் பறக்கும் ஆயிரம் விளக்கு தொகுதி
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் வளர்மதியும், திமுக சார்பில் அவருக்கு நெருக்கமானவராக விளங்கிய கு.க.செல்வமும் களமிறக்கப்பட்டுள்ளதால் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
தலைமை மீதான வளர்மதியின் முரட்டு பக்தி எல்லோரும் அறிந்ததே. பெரிய டாலரில் ஜெயலலிதா படம் போட்ட செயினை அணிந்திருக்கும் தோற்றம்தான், வளர்மதி என்றவுடன் ரத்தத்தின் ரத்தங்கள் எண்ணங்களில் உடனே தோன்றும்.
ஆனால், இந்த வளர்மதி, எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணியாகவும், ஜெயலலிதா அணியாகவும் பிரிந்து கிடந்தபோது, ஜானகி அணியில் இருந்தவர் என்பதும், ஜெயலலிதாவுக்கு எதிராக மிக மோசமான சொற்களை வீசி பிரசாரம் செய்தவர் என்பதும் பலருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய தகவல்தான்.

எம்.ஜி.ஆர் கால எம்.எல்.ஏ
1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றபோது, தனது அரசியல் குரு ஆர்.எம்.வீரப்பனின் சிபாரிசால் மயிலாப்பூரில் போட்டியிட்டு முதல் முறைாக எம்.எல்.ஏ ஆனார், இந்த மதுரை மாவட்டத்து வளர்மதி.

வலதுகரம் செல்வம்
இதன்பிறகுதான் ஆர்.எம்.வீரப்பன் இருந்த ஜானகி அணியிலேயே இருந்து ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினார். அப்போது முதல் இவரது வலதுகரமாக விளங்கியவர் கு.க.செல்வம்.

நெருக்கம்
1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்ற பெற்றபோது, சசிகலாவோடு நெருக்கம் காண்பித்து, ஆன்மீக பிரசாதங்கள் வழங்கி ஜெயலலிதாவுக்கும் நெருக்கமாக மாறினார் வளர்மதி. பின்னாளில் வளர்மதியின் தொழில்களுக்கு உதவியாளராக மாறிப் போனார் செல்வம்.

தோஸ்துகள்
செல்வத்துக்கு தெரியாத வளர்மதி ரகசியங்கள் கிடையாது. வளர்மதிக்கு தெரியாத செல்வத்தின் ரகசியங்கள் கிடையாது. இருவரும் நகமும் சதையுமாக, பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து இருந்தவர்கள். இது இரு கட்சி மேலிடங்களுக்கும் நன்கு தெரியும்.

எதிர் வேட்பாளர்கள்
அமைச்சர் வளர்மதி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையில், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளில் சிக்காத ஒருவரை வேட்பாளராக நிறுத்த திமுக முடிவெடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த அக்கட்சியினருக்கு ஏமாற்றமே. வளர்மதிக்கு நெருக்கமானவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஷ்புவிற்காக கூட நோ
காங்கிரஸ் சார்பில் குஷ்புவை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்று அக்கட்சி தலைவர் இளங்கோவன் திமுக தலைவரிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், ஆனால், கு.க.செல்வத்திற்காக, அந்த கோரிக்கையை ஸ்டாலின் நிராகரித்துவிட்டதாகவும் கூட ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி
ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது சிபாரிசின் மூலம், கு.க.செல்வம், வளர்மதியை எதிர்த்து களமிறக்கி விடப்பட்டுள்ளார். இருவருமே அதிரடி வேட்பாளர்கள் என்பதாலும், ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள் என்று கூறும் வாசகத்திற்கு பொருந்தமானவர்கள் என்பதாலும் சூடேறி கிடக்கிறது ஆயிரம் விளக்கு.












Click it and Unblock the Notifications