ஐடி ரெய்டால் விஜய பாஸ்கருக்கு இரட்டை ஆப்பு.. 'அப்பல்லோ ஆபரேஷனால்' பறிபோகிறதா அமைச்சர் பதவி?
சென்னை: ஐடி ரெய்டால் விஜயபாஸ்கருக்கு இரட்டை ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒன்று, ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்த விஷயம் அம்பலமானது, இன்னொன்று ஜெயலலிதாவிடம் கை ரேகை பெற்றதாக சாட்சி சொன்ன அரசு டாக்டருக்கு லஞ்சம் கொடுத்ததாக சந்தேகம் கிளம்பியுள்ளதற்கு.
கடந்த வருடம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தனி சின்னம் வழங்குவதற்கு அத்தாட்சி கடிதமான FORM B-யை வேட்புமனுவுடன் அளிக்க வேண்டும்.
இப்படி அளிக்கப்பட்ட ஃபார்ம் B-யில் கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய இடது கை விரல் ரேகை பதித்து ஃபார்ம் B அனுப்பப்பட்டது.
டாக்டர் அத்தாட்சி
மருத்துவமனையில் அ.தி.மு.கவின் பொது செயலாளர் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய இடது கை கட்டை விரல் ரேகை பதிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டது. அரசு டாக்டரின் அத்தாட்சியோடு FORM B-யை ஏற்றுக்கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் குறிப்பிட்டிருந்தது. இதன்படி, அரசு டாக்டர் பாலாஜி என்பவர் அத்தாட்சி அளித்தார்.
டாக்டர்கள் பேட்டி
இந்நிலையில் சசிகலா முதல்வராக ஜரூராக வேலை ஆரம்பித்த நிலையில், திடீரென லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது கை ரேகை விவகாரத்தை நிருபர்கள் எழுப்பினர்.
டாக்டர்கள் மறுப்பு
கைரேகை பதிவு செய்யும்போது ஜெயலலிதா உயிரோடு, சுய நினைவுடன்தான் இருந்தார் என்று லண்டன் டாக்டர் பீலே திட்டவட்டமாக தெரிவித்தார். கைரேகை பதிவு செய்தது அக்டோபர் 28 ஆம் தேதி எனும் நிலையில், அரசு டாக்டருக்கு விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது நவம்பர் 1ம் தேதியாகும். எனவே இடைத் தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா கைரேகை அவரது அனுமதியின்றி தப்பாக பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பதவி பறிபோகுமா
அரசு டாக்டருக்கு விஜய பாஸ்கர் பணம் கொடுத்துள்ளது லஞ்சம் என்றே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் அவர் மீது வழக்கு பாய வாய்ப்புள்ளது. எனவே ஐடி ரெய்டு மட்டுமின்றி, அந்த ரெய்டின்போது சிக்கிய ஜெயலலிதா தொடர்பான இந்த முக்கிய ஆவணமும் விஜயபாஸ்கருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்பதே உண்மை. எனவே விஜயபாஸ்கர் பதவி பறிபோகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.