ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது உண்மை... வேறவழியில்லாமல் ஒப்புக் கொண்ட விஜயபாஸ்கர்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது உண்மைதான் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தங்கள் அணியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்பு கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் வினியோகிப்பதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.
முக்கிய ஆவணங்கள்
இதில் ரூ.89 கோடி வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் கையெழுத்திட்டதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த சோதனை அறிக்கையின் பேரில் தேர்தல் ஆணையம் இடைதேர்தலை ரத்து செய்தது.
சம்மன்
இந்த நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன், விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் கால்மணி நேர இடைவெளிகளில் துணை இயக்குநர் ராஜமாணிக்கம் முன்பு ஆஜராகினர்.
விசாரணை தொடங்கியது
3 பேரிடமும் தனித்தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரத்குமாரை பொருத்தமட்டில் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள அவருக்கு ரூ.7 கோடி பணம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரூ.10 லட்சம் மட்டும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலில் தனித்து போட்டி என்று கூறி வந்த சரத்குமார் திடீரென தினகரனுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அவர் பணம் பெற்றதற்கான முகாந்திரம் உள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
விஜயபாஸ்கரிடம் சரமாரி கேள்வி
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடைபெற்ற விசாரணையில் பணம் வினியோகம் செய்ததை ஒப்புக் கொண்டார். அங்கு வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ. 89 கோடி மட்டுமல்லாமல் பல்வேறு முறைகேடுகளில் விஜயபாஸ்கர் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. பணப்பட்டுவாடாவுக்கான முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பணப்பட்டுவாடாவில் சிக்கியுள்ள அமைச்சர்கள் குறித்த விவரங்கள், சரத்குமார் உள்ளிட்ட உதிரி கட்சிகளுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்டவை குறித்து சரமாரி கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி வருகின்றனர். இதனால் மேலும் சில அமைச்சர்கள் சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 5 மணி நேரம் விஜயபாஸ்கரிடம் நடைபெற்ற விசாரணை தற்போது முடிவுற்றது. எனினும் சரத்குமாரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.