விஜயபாஸ்கர் சொத்துகள் பறிமுதல்... கிடுக்குப்பிடி விசாரணை... அடுத்து கைது அல்லது டிஸ்மிஸ்?
சர்ச்சைக்குரிய தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: வருமானவரித்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ள விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவாரா? அல்லது அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? என்பதுதான் அதிமுகவின் ஹாட் டாபிக்.
குட்கா முதல் குவாரி வரை ஊழல் முறைகேடுகளில் சிக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கினார் விஜயபாஸ்கர் என வருமானவரித்துறை ஆவணங்களிலேயே பதிவாகி உள்ளது.
கூவத்தூர், ஆர்கே நகர்
கூவத்தூரில் சசிகலாவுக்காக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்ததில் விஜயபாஸ்கருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆர்கே நகர் தொகுதியில் தினகரனுக்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை முன்னின்று செய்தவர் விஜயபாஸ்கர்.
சொத்துகள் முடக்கம்
இதனால் வருமானவரித்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கினார் விஜயபாஸ்கர். தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அவருடைய 100 ஏக்கர் நிலம், குவாரி உள்ளிட்ட சொத்துகள் அனைத்தையும் முடக்கிவைத்துவிட்டனர்.
டிஸ்மிஸ்?
அத்துடன் விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை நடத்துகிறது வருமானவரித்துறை. இப்படி ஊழல் புகார்களில் சிக்கும் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் விஜயபாஸ்கர் எந்த நிமிடத்திலும் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்றே கூறப்படுகிறது.
கைது?
அதேநேரத்தில் தினகரன் தரப்புக்கு அதிர்ச்சி தரும் வகையில் சசிகலா குடும்பத்து விசுவாசியான விஜயபாஸ்கர் கைது செய்யபப்டவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கும் தினகரனுக்கு செக் வைக்கும் வகையில் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.