அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவைப் பார்ப்பதாக கூறுகிறார் சி.ஆர். சரஸ்வதி!
சென்னை: அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் தினமும் "அம்மா"வை பார்த்து ஆலோசனை நடத்துகின்றனர் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவிற்கு உடல் நலம் சரியாகிவிட்டதாகவும் வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. ஆனாலும் அவரை இதுவரை யாரும் சென்று பார்த்ததாக தெரியவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதா உடல் நிலை குறித்து தலைமை செயலாளர் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, இன்று செய்தியாளர்களிடம் சி.ஆர். சரஸ்வதி, அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ஜெயலலிதாவை சந்தித்து தினமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவின் புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட சொன்னது பற்றிய கேள்விக்கு, "போட்டோவை வெளியிட்டாலும் அதற்கும் கருணாநிதி ஏதாவது சொல்வார். அது போட்டோ ஷாப்பில் உருவாக்கப்பட்டது என்பார். முதல்வர் பேசி ஆடியோவை வெளியிட்டாலும் அதற்கும் ஏதாவது கருணாநிதி சொல்வார்" என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.