எம்ஜிஆர் பேத்தியிடம் செல்போன் பறித்த பலே ஆசாமிகள்
சென்னை: சாலையோரம் நின்றுகொண்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பேத்தியின் உயர் ரக செல்போனை பைக்கில் வந்த வாலிபர்கள் அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன், எம்ஜி சக்கரபாணி. இவரது பேரன் பிரவீன். பிரவீனின் மனைவி வாகினிதாஸ் (32). இவர்கள் சேத்துப்பட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வாகினிதாஸ், ராஜா அண்ணாமலைபுரத்திற்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

போகும் வழியில் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி நின்றபடி போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அவரை நோக்கி பைக் ஒன்று அதி வேகமாக வந்தது.
மின்னல் வேகத்தில் வந்த பைக்கில் இரண்டு பேர் இருந்தனர். அதில் ஒருவன், வாகினிதாஸ் பேசிக்கொண்டு இருந்த செல்போனை சட்டென பறித்தான். மற்றொருவன் வண்டியை விரைந்து ஓட்டினார். சில வினாடிகள் இந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. வாகினிதாஸின் கூச்சல் கேட்டு, அப்பகுதியில் செல்வோர் ஓடி வந்தனர். இருப்பினும், பைக் நபர்கள் தப்பிவிட்டனர்.
சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் வாகினிதாஸ் புகார் அளித்துள்ளார். மயிலாப்பூர் துணை கமிஷனர் பால கிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எம்ஜிஆர் உறவினர் ஒருவரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விலையுயர்ந்த செல்போன்களை பறித்து செல்லும் பைக் கும்பல் சென்னையில் பெருகியுள்ளதாக போலீசாரின் புள்ளி விவரம் கூறுகிறது.












Click it and Unblock the Notifications