சிவகாசி மாரனேரியில் பட்டாசு ஆலை வெடி விபத்து- 2 பேர் பலி
சிவகாசி: சிவகாசி அருகே மாரனேரியில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தாசில்தார் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான தனியார் பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இன்று காலையில் சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது.
வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பட்டாசு தொழிற்சாலையின் அறைக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் இருவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் பெயர் பொண்ணுப்பாண்டி, அழகர்சாமி என்பதாகும்.
இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு வீரர்கள் சிவகாசி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடி விபத்து பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு தயாரிக்க மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வே வெடி விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.