கரூர் அருகே 8ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேர்: தீக்குளித்த சிறுமி
கரூர்: கரூர் அருகே பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தோகமலை அருகே உள்ளது காவக்காரன்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 14, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
மல்லிகா கடந்த 28ம் தேதி தோகமலையில் நடைபெற்ற வார சந்தைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரங்கநாதன், பாலமுருகன், ராஜா ஆகியோர் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்துள்ளனர். மேலும் மல்லிகாவை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
மல்லிகா சத்தம் போட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த சிறுமி மல்லிகா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மல்லிகாவை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரங்கநாதன், பாலமுருகன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜா என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications