நெல்லை அருகே மாணவன் கழுத்தறுத்து கொலை: நரபலியா? என சந்தேகம்
நெல்லை: நெல்லை அருகே மாணவன் ஒருவன் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள், மாணவனை கடத்தி நரபலி கொடுத்து கொலை செய்தார்களா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ளது முத்துவீரப்பபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சுடலை என்பவரின் மகன் இசக்கிதாஸ். அவன், அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.
திருக்கார்த்திகை தினமான ஞாயிறன்று மாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். வெகு நேரம் ஆகியும், அவன் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த இசக்கிதாஸ் பெற்றோர், இரவு முழுவதும் அவனை தேடி அலைந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு கிணற்றில் இசக்கிதாஸ் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு கிடந்துள்ளது. இதை பார்த்த அவனது பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுது அவனது உடலை தேடியுள்ளனர். அப்போது, இசக்கிதாஸ் உடல், அந்த கிணற்றில் இருந்து சற்று தூரத்தில் கிடந்துள்ளது.
இந்த தகவல் கிடைத்ததும் மூலக்கரைப்பட்டி போலீஸார் விரைந்து வந்து இசக்கிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவன் இசக்கிதாஸை, மர்ம நபர்கள் நரபலி கொடுத்திருக்கலாம் என்று பெற்றோரும், ஊர் பொதுமக்களும் சந்தேகப்படுவதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றானர்.
இந்த சம்பவம், சுற்றுப்புற கிராம மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.