கன்னியாகுமரி அருகே பரபரப்பு.. காரில் வாலிபர்களுடன் வந்த இளம்பெண் திடீர் மாயம்?
கன்னியாகுமரி: கன்னியாகுமாரி, தென்தாமரைகுளம் அருகே சொகுசு காரில் வாலிபர்களுடன் வந்து இறங்கிய இளம் பெண் என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி சாலையில் நேற்று முன்தினம் இரவு கருப்பு நிற சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அகஸ்தீஸ்வரம் வழியாக வந்த அந்த கார் இரவு சுமார் 10.30 மணியளவில் அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரில் இருந்து 3 வாலிபர்களும், 1 இளம் பெண்ணும் வேக வேகமாக இறங்கினர்.
காரின் கதவை கூட பூட்டாமல் அவர்கள் அவசரம் அவசரமாக பைக்குகளில் ஏறி அங்கிருந்து சென்றனர். அந்த வழியாக சென்ற சிலர் இதை கவனித்து தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது காரில் ஒரு துப்பட்டா மட்டும் கிடந்தது. இது தவிர ஒரு கத்தியும் இருந்ததாக கூறப்படுகிறது.
காரில் வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் இதுவரை திரும்பியும் வரவில்லை. இளம் பெண் என்ன ஆனார்? வாலிபர்கள் எங்கே சென்றார்கள்? என்பது மர்மமாகவே உள்ளது. அந்த கார் தமிழ்நாடு 55 பதிவெண் கொண்டது. எனவே வெளி மாவட்டத்தில் இருந்து இளம்பெண்ணை கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.