மிக்ஸியிலிருந்து மசாலாவை எடுத்தபோது கரண்ட் வந்ததால் துண்டான ஆசிரியை விரல்கள்
சென்னை: மின்தடையால் எப்படியெல்லாம் இம்சையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். கரண்ட் போனதால் மிக்ஸியை ஆப் செய்யாமல் அதிலிருந்து மசாலாவை எடுத்தபோது திடீரென கரண்ட் வந்து விட்டதால், மிக்ஸி சுற்றியதில் அதில் கையை விட்டிருந்த ஆசிரியையின் விரல்கள் துண்டாகி அவர் துடித்துப் போய் விட்டார்.
சென்னையில் வேலை பார்த்து வருகிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த ராபர்ட். இவரது மனைவி பெர் பிளாரன்ஸ். அரக்கோணத்தில் இவர் தங்கியிருக்கிறார். ஆசிரியையாக இருக்கிறார்.
2 நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம் போல அரக்கப் பறக்க வேலையில் ஈடுபட்டிருந்தார். தானும் பள்ளிக்கு ரெடியானதோடு, சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்குக் கிளப்புவது என பிசியாக இருந்தார்.
குழம்பு வைப்பதற்குத் தேவையான மசாலாவை மிக்ஸியில் போட்டு அரைக்க ஆரம்பித்தபோது கரண்ட் போயுள்ளது. இதனால் டென்ஷனான அவர் அம்மியில் வைத்து அரைக்கலாம் என்று முடிவு செய்து மிக்ஸியை ஆப் செய்யாமலேயே மசாலாவை அதிலிருந்து எடுக்க ஆரம்பித்தார். அப்போது திடீரென கரண்ட் வந்து விட்டது.
இதனால் மிக்ஸி பிளேடுகள் படு வேகமாக சுற்ற ஆரம்பித்தன. இதில் பிளாரன்ஸின் கை சிக்கிக் கொண்டது. படு வேகமாக பிளேடு சுற்றியதால் பிளாரன்ஸின் விரல்கள் சிக்கி துண்டாகி விட்டன.
அலறித் துடித்த பிளாரன்ஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வலது கையில் நான்கு விரல்களின் முனைப் பகுதிகளும் துண்டாகி விட்டன.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கரண்ட் போய் விட்டதே என்று கவனக்குறைவாக இருக்காமல் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை ஆப் செய்த பின்னரே அதில் கை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட துன்பத்தை சந்திக்க நேரிடும்.












Click it and Unblock the Notifications