வா, வா தலைவா.. அழகிரியை வரவேற்று மெரினாவில் எதிரொலிக்கும் கோஷம்
Recommended Video
சென்னை: மறைந்த கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து அவரது சமாதி வரை இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பல மாவட்டங்களில் இருந்தும் அழகிரியின் ஆதரவாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் பேர் வரை கூடுவார்கள் என்று அழகிரி கூறியிருந்த நிலையில் சில ஆயிரம் பேரை காலை 10 மணி அளவில் மெரினாவில் பார்க்க முடிந்தது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற தொண்டர் 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: அழகிரியின் அழைப்பை ஏற்று மதுரை மாவட்டத்திலிருந்து மட்டும் சுமார் 15,000 பேர் சென்னைக்கு வருகை தந்துள்ளோம்.
மேலும் பல மாவட்டங்களிலிருந்து வந்து கொண்டுள்ளார்கள். போலீஸார் கடும் கெடுபிடி செய்வதினால் உரிய நேரத்திற்கு தொண்டர்களால் இங்கு வந்து சேர முடியவில்லை. அப்படி வந்திருந்தால் ஒரு லட்சம் பேரை தாண்டி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே கூட்டத்தினர், "வா வா தலைவா" என்று அழகிரியை வரவேற்று கோஷம் எழுப்பியபடி இருந்ததை பார்க்க முடிந்தது. அவர்கள் கைகளில் கருணாநிதி, அழகிரி புகைப்படத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி இருந்தனர்.