முதலில் பாஜக, இப்ப திமுகவுக்கு சிக்னல்... அலைபாயும் அழகிரியை முதலில் அழைக்கப் போவது யாரு?
எந்த கட்சிக்கு தாவுவது என அலைபாயும் அழகிரியை முதலில் அழைக்கப் போவது பாஜகவா? திமுகவா? என்பதுதான் லேட்டஸ் பட்டிமன்ற தலைப்பு.
Recommended Video

சென்னை: பாஜகவுக்கு சிக்னல் காட்டிய அதேவேகத்தில் திமுகவில் மீண்டும் நுழைவதற்கு விரும்புவதாகவும் மு.க. அழகிரி காட்டியிருக்கிறார். தற்போதைய நிலையில் மு.க. அழகிரிக்கு எந்த கட்சி முதலில் சிக்னல் காட்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீவிர அரசியலைவிட்டு மு.க. அழகிரி ஒதுக்கப்பட்டு 3 ஆண்டுகளாகிவிட்டது. அழகிரி என்னதான் மவுனமாக இருந்தாலும் ஸ்டாலினுக்கு எதிராக எப்போது யுத்தத்தை மீண்டும் தொடங்குவாரோ என்கிற பதற்றம் அவரது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.
சென்னையில் கருணாநிதியை சந்திக்க அழகிரி வந்தாலே பரபரப்பு செய்திதான் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியை திடீரென பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மோடிக்கு பாராட்டு
இச்சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அழகிரி நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் பிரதமர் மோடி நல்லாட்சி நடத்துவதாக பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லியே கேட்டது
இது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. பாஜகவுக்கு அழகிரி சிக்னல் காட்டுகிறாரோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதனிடையே பிரதமர் அலுவலக அதிகாரிகளே மு.க. அழகிரியை தொடர்பு கொண்டு அறிக்கையை கேட்டு வாங்கியதாகவும் ஒரு தகவல் வெளியாக ஸ்டாலின் தரப்பு ஜெர்க் ஆனது.

பாஜக சதி?
ஏற்கனவே கருணாநிதி குடும்பத்தில் சிலரை வைத்து திமுகவுக்குள் கலகம் ஏற்படுத்த பாஜக ரகசிய திட்டம் தீட்டுவதாக கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே பிரதமர் மோடியின் கருணாநிதி சந்திப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அழகிரி பேட்டி
இதனிடையே திடீரென கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட தயார் எனவும் மு.க. அழகிரி அறிவித்திருக்கிறார். பாஜகவுக்கு கடந்த வாரம் சிக்னல் காட்டிவிட்டு இந்த வாரம் திமுகவுக்குள் மீண்டும் நுழைவதாக காட்டிக் கொள்கிறார் அழகிரி. அழகிரியின் இந்த ஆடுபுலி ஆட்டமே வலிமையாக இருக்கும் திமுகவின் ஓட்டு வங்கியை குழப்பத்தான்... இதுவும் டெல்லியின் அஜெண்டாதான் என ரொம்பவே பதறுகிறது ஸ்டாலின் தரப்பு.












Click it and Unblock the Notifications