கருணாநிதி சமாதியில் கண்கலங்கி அழுதார் மு.க.முத்து.. கைத்தாங்கலாக கூட்டிவரப்பட்டார்!
கருணாநிதி சமாதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் மு.க.முத்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது மறைவினால் தமிழக மக்கள் மிகுந்த வருத்தத்திலும் சோகத்திலும் உள்ளனர்.
வெளியூர்களிலிருந்து தங்கள் குடும்பத்தினருடன் சென்னை வந்து கருணாநிதி சமாதியை பார்த்து அஞசலி செலுத்திவிட்டு செல்கின்றனர். இதேபோல திரைப்பிரபலங்களும் தங்களது கண்ணீர் அஞ்சலியினை வணக்கத்துடன் சமாதி வந்து செலுத்தி விட்டு செல்கிறார்கள்.
கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். ஆனால் கருணாநிதியின் முதல் மனைவியின் மகனாக மு.க.முத்து மட்டும் வராமலே இருந்தார். அவர் சிறிது காலமாகவே உடல்நலம் குன்றி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை மு.க.முத்து தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்த மெரினாவுக்கு வந்தார். அவரை சிலர் கைத்தாங்கலாக கூட்டி வந்தனர். தந்தை சமாதி முன் வந்து நின்ற மு.க.முத்து, தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் சிறிது நேரம் சமாதியை பார்த்து கண்கலங்கி அழுதார்.