ஆளுநரின் உரை மஸ்கோத் அல்வா போல் இருக்கு... ஸ்டாலின் நக்கல்
ஆளுநரின் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை : தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற தொடங்கினார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளும் கட்சிக்கு உத்தரவிடக் கோரினர். ஆனால் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசி வந்தார். இதை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டியில் இருந்தாதானே...
இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளுநர் உரை 'மஸ்கோத் அல்வா' போல அமைந்திருக்கிறது. ஆளுநர் உரை மூலம் வருவாய் குறைந்திருப்பதை ஒப்புகொண்டு இருக்கிறார்கள். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். வருவாய் குறைந்திருக்கும் நிலையில் இதுவரை அவர்கள் அறிவித்த திட்டங்களை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது. ஒருவேளை, மந்திரக்கோல் எதையாவது வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

தொழில் வளர்ச்சி
ஆளுநர் உரையில் கடன்சுமை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தொழில் வளர்ச்சியை எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்ற விளக்கமும் குறிப்பிடப்பட வில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவது குறித்தும் ஆளுநர் உரையில் குறிப்பிடவில்லை. குறிப்பாக, விவசாயிகள் தொடர்ந்து முன் வைத்து வரும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் எதுவும் சொல்லப்படவில்லை என்பது வேதனைக்குரியதாக அமைந்திருக்கிறது. ஆளுநர் உரையின் துவக்கத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிக்கு பெரிய பாராட்டைத் தெரிவித்து இருக்கிறார்கள்.

மத்திய அரசின் உரை
எனவே, மாநில அரசு தயாரிக்கும் உரையை மட்டுமே ஆளுநர் படிப்பது வழக்கமாக இருந்து வரும் மரபு. ஆனால், மத்திய அரசு தயாரித்த உரை இன்றைக்கு ஆளுநரால் படிக்கப் பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. எனவே தான், ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல அமைந்திருக்கிறது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவதென்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது. வழக்கமாக, நிறைவு நாளன்று முதல்வரின் பதிலுரைக்கு முன்பாக சட்டமன்ற மரபின்படி எதிர்க்கட்சித் தலைவரின் உரை அமைவது நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் சில சூழ்நிலைகள் காரணமாக, குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பில் இருந்த நேரத்தில், அவரது உடல்நலன் குன்றியிருந்த சூழ்நிலையிலும், தவிர்க்க முடியாத வேறு சில நேரங்களிலும், அந்த நடைமுறை தவிர்க்கப்பட்டு இருக்கலாம். அதையே இப்போதும் தொடர வேண்டும் என்று சபாநாயகரும், முதல்வரும், குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் வலியுறுத்தினார்கள்.

அலுவல் கூட்டமே தேவையில்லையே
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் உரைக்கு பிறகுதான் முதல்வரின் பதிலுரை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை அவர்கள் ஏற்கவில்லை. அப்படியெனில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை நீங்கள் கூட்டியிருக்க வேண்டிய அவசியமே இல்லையே, நீங்களே முடிவு செய்து, நீங்களாகவே அறிவிப்பதெனில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்த வேண்டும்? எனவே, இதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டு, எங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications