திமுக நிர்வாகி ஜி.எம்.ஷா உருவப்பட திறப்பு விழா: 9ம் தேதி நாகர்கோவில் வரும் மு.க. ஸ்டாலின்
நாகர்கோவில்: குமரி மாவட்ட திமுக நிர்வாகி ஜி.எம்.ஷா படத்திறப்பு விழாவிற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி நாகர்கோவில் வருகின்றார்.
குமரி மாவட்ட திமுகவின் மூத்த நிர்வாகியாகவும், கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் இருந்தவர் ஜி.எம்.ஷா.
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த மாதம் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது படத்திறப்பு விழா வரும் 9ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஜி.எம்.ஷா உருவப்படத்தை திறந்து வைக்கிறார். இதற்காக அவர் வரும் 9ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அன்று பிற்பகல் வரை அங்கு ஓய்வு எடுத்த பின்பு அவர் மாலை 3 மணிக்கு கார் மூலம் நாகர்கோவில் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு மு.க.ஸ்டாலின் திட்டமிட்டபடி அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை நீக்கியதில் இருந்து, தென் மாவட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அதிக அளவில் தென் மாவட்ட நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகின்றது.