அனல் கொளுத்திய தேர்தல் ஃபினிஷ்.. கூலாக கொடைக்கானலில் வாக்கிங் போன ஸ்டாலின்.. பொதுமக்களுடன் செல்ஃபி!
திண்டுக்கல்: கொடைக்கானல் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை ஏரிச்சாலையில் 6 கிலோ மீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் வாசிகள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியானது. அப்போது முதல் தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இறங்கினர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் சென்றுள்ளார். அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பலத்த பாதுகாப்புடன் தங்கும் விடுதிக்கு வந்தடைந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஏரி சாலையில் பலத்த பாதுகாப்புடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். நடைபயிற்சி செய்த ஸ்டாலின் சுற்றுலாப் பயணிகள், துப்புரவு பணியாளர்கள், உள்ளூர் வாசிகள், கடை வியாபாரிகள், என அனைவரையும் சந்தித்து அவர்களிடம் உரையாடினார்.
பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அனைவரிடமும் இயல்பாக பேசி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் தங்கியுள்ள தனியார் நட்சத்திர விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பும் வரை, கொடைக்கானல் நகர் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கொடைக்கானல் செல்வதற்காகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்திருந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வரும் போது அவரிடம் செய்தியாளர்கள், "சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், வெற்றி என்பதைக் குறிக்கும் வகையில் கையை உயர்த்தி தம்ப்ஸ் அப் காட்டினார்.












Click it and Unblock the Notifications