ஸ்டாலின் கை காட்டுபவர்தான் அடுத்த பிரதமர்.. துரைமுருகன் அதிரடி!
ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் என துரைமுருகன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் இப்போதுதான் திமுக தலைவராகவே ஆகி உள்ளார். ஒரே ஒரு மாவட்ட செயலாளர் கூட்டத்தை மட்டுமே கூடி பேசியுள்ளார். இன்னும் திருவாரூர், திருப்பரங்குன்றம் களப்பணியிலேயே முழுமையாக திமுக தரப்பில் இறங்கவில்லை என கூறப்படுகிறது.
பொருளாளர் பேச்சு
ஆனால் 2 இடைத்தேர்தல்களை சந்திக்காமலேயே, அவைகளில் திமுக வெற்றி பெறாமலேயே, பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு ஸ்டாலின் முன்னேறிவிட்டதை போன்று பொருளாளர் நேற்று பேசி உள்ளார்.
துரைமுருகன் பேச்சு
தென்காசியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, '55 ஆண்டுகள் கருணாநிதியை நிழல் கூட பிரிந்திருக்கலாம், ஆனால் நான் பிரிந்ததில்லை; என் குடும்பத்தை விட அவரது அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம். திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை என பொய்யான குற்றச்சாட்டுக்களை பலர் கூறி வருகின்றனர்.
அடுத்த பிரதமர்?
ஆனால் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டியுள்ளோம்.வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அதுமட்டுமல்ல, டெல்லியில் அடுத்த மத்திய ஆட்சியை நிர்மாணிக்கக்கூடிய சக்தி ஸ்டாலினிடம் இருக்கிறது. ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர்" என்றார்.
நெட்டிசன்கள்
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் எப்படி, எப்போது, ஸ்டாலினுக்கு இப்படி ஒரு 'பவர்" வந்துவிட்டது என வழக்கம்போல் நெட்டிசன்கள் இதையும் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.