அனைத்து தலைவர்களுக்கும் போல ஜெ.வுக்கும் கல்யாண பத்திரிகையா?: மு.க. ஸ்டாலின் விளக்கம்
சென்னை: அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தமது தம்பி மகன் கல்யாண பத்திரிகையை கொடுத்தது போல அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், யோசிக்கலாம் என பதிலளித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது சகோதரர் மகனின் திருமண அழைப்பிதழை பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் இல்லத்துக்கு ஸ்டாலின் முதன் முறையாக சென்றார். அங்கு ஸ்டாலினை வரவேற்றார் ராமதாஸ்.
தன் சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை ராமதாஸிடம் அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், வடநாட்டில் நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து அழைத்து வருகிறோம் என்றார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன் பின்னர் திமுக உயர்மட்ட குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும் என்றார்.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நேரில் திருமண அழைப்பிதழ் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வரா? மக்கள் முதல்வரா? என திருப்பி கேட்டுவிட்டு முதலில் அவர் தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும். அதன் பிறகு யோசிக்கலாம் என்றார்.