வி.எச்.பி ரத யாத்திரைக்கு அனுமதி தரக் கூடாது: கருணாஸ், தனியரசு உள்பட 4 பேர் வெளிநடப்பு
ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் 4 பேர் தமிழக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை கண்டித்து எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 15-ஆம் தேதி 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுவதாக அலுவல் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தி, இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் உறுப்பினர்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முற்பட்டனர்.
ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கினால், சமூகம் சார்ந்த கலவரங்கள் ஏற்படும் எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அந்த 4 எம்எல்ஏக்களும் குற்றம்சாட்டினர்.