திருச்சியில் திரள்கிறார்கள் ம.ந.கூ தலைவர்கள்.. ஒரே மேடையில் பேசப் போகிறார்கள்.. 11ம் தேதி!
சென்னை: தேமுதிக - தமாகா- மக்கள் நலக் கூட்டணியிந் சார்பில் திருச்சியில் 11ம் தேதி பிரமாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். அக்கூட்டத்தில் விஜயகாந்த், ஜி.கே.வாசன் மற்றும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணி முதலில் நான்கு தலைவர்களுடன் செயல்பட்டு வந்தது. அதில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. பின்னர் அதில் தேமுதிக வந்து சேர்ந்தது. இதையடுத்து தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி என்று அது அழைக்கப்பட்டது.
அதன் பின்னர் கடைசி நேரத்தில் ஜிகே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸும் வரவே ஆறு கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக அது விரிந்தது. தற்போது இதை தேமுதிக தமாகா மக்கள் நலக் கூட்டணி என்று அழைக்கிறார்கள்.
இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பிரிந்து சென்று தீவிரப் பிரசாரம் செய்து வருகின்ரனர். இந்த நிலையில் ஆறு தலைவர்களும் ஒரே மேடையில் பேச முடிவு செய்துள்ளனர். அதன்படி திருச்சியில் 11ம் தேதி பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதில் திருமாவளவன், விஜயகாந்த், வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜி.கே.வாசன் ஆகிய ஆறு தலைவர்களும் ஒரே மேடையில் பேசுவார்கள். பிரேமலதா விஜயகாந்த்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.