வைகோ (150), விஜயகாந்த் (160), பிரேமலதா (120-160).. ஆளுக்கொரு "நம்பர்" சொல்லும் ம.ந.கூ!
சென்னை: தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி தேவியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதால் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது போன்ற ஊழல்களை தடுக்க நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற என்ஜினியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.
சாலை மற்றும் கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுவது குறித்து தெரிய வந்தால் அதற்கான ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மீது வழக்குப்பதுவு செய்வதுடன், அவர்களுக்கு உதவிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வோம்.
இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி ஆட்சிக்கு வரும் என்றார்.