தமிழ் படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு கட்டண விலக்களித்த மனோன்மணியம் பல்கலை.
தென் மாவட்டங்களில் தமிழ் முதுகலைப் படிக்க விரும்பும் மாணவர்கள் குறைந்து வருவதால் தமிழ் படிக்க விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்க திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழியல் துறையில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளித்துள்ளது.
கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழ் மொழியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய அளவில் இல்லாததால் பொதுவாகவே மாணவர்கள் ஆர்வமின்றி தமிழ் படிக்க முன்வருவதில்லை. இதனால், தமிழ் மொழியின் வளர்ச்சி தடைபட வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மாவட்டங்களில் தமிழ் முதுகலைப் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதனால், தமிழ் வளர்ச்சித் தடைபடும் என்பதை அறிந்து தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகப் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லா இலவசக் கல்வி இந்த ஆண்டு முதல் வழங்கிட பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் முதுகலை பட்டத்திற்கு சேரும் மாணாக்கர்களுக்கு இந்த ஆண்டு (2018 - 2019) கல்விக்கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. கட்டணமில்லா இலவசக் கல்வியாக முதுகலை தமிழ்ப்படிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்ப் படிக்க விரும்பும் மாணாக்கர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பாஸ்கர் அறிவித்துள்ளார். இதனை பதிவாளர் சந்தோஷ்பாபு அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications