சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்ய தமிழகம் வரும் மோடி, அமித் ஷா
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகம் வர உள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. ஆனால் தற்போது அந்த கூட்டணி உடைந்து சிதைந்துவிட்டது. சட்டசபை தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. மதிமுகவோ மக்கள் நலக் கூட்டணிக்கு சென்றுவிட்டது.

பாஜக தேமுதிகவை கூட்டணிக்காக தாங்கு தாங்கு என தாங்கியும் அதுவும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. சிறப்பான கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட பாஜக தயாராகவும், வலுவாகவும் உள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அவர்களின் பிரச்சார பயண திட்டத்தை பாஜகவினர் வகுத்து வருகிறார்கள்.
கூட்டணிக்கு யார் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி மோடியின் திறமையான பிரச்சாரமும், அமித் ஷாவின் சூப்பர் வியூகமும் தங்களுக்கு கைகொடுக்கும் என்று பாஜகவினர் நம்புகிறார்கள்.
மோடி தமிழகத்தில் நான்கு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளாராம். தினமும் 2 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளாராம். பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தை திருச்சியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பாராம்.












Click it and Unblock the Notifications