மோடியின் 'போலி என்கவுண்டர்'... ப.சிதம்பரம் 'அட்டாக்'!
சிவகங்கை: பொய்யான தகவலைக் கூறி ஒரு போலி என்கவுண்டரை சென்னையில் நடத்தி விட்டுச் சென்றுள்ளார் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
சென்னையில் நேற்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது மறு வாக்கு எண்ணிக்கை மூலம் வென்றவர்தான் ப.சிதம்பரம் என்றும் வர்ணித்திருந்தார்.
இதற்கு ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது ...

நரேந்திர மோடி மீண்டும் ஒரு பொய்யான தகவல்களுடன் ஒரு போலி என்கவுண்ட்ரை நடத்தி விட்டுச் சென்றுள்ளார். சென்னை அருகே வண்டலூரில் நேற்று நடந்த அக்கட்சியின் கூட்டத்தில், என்னை மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் என்று அவர் வர்ணித்துள்ளார் என்று அறிந்தேன்.
உண்மை என்னவென்றால் 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில், ஒரே ஒரு முறைதான் வாக்குகள் எண்ணப்பட்டன. மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.
மேலும், மறு வாக்கு எண்ணிக்கை கோரி மிகவும் தாமதமாக தோல்வி அடைந்த வேட்பாளர் கோரிக்கை விடுத்ததால் அதை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்து விட்டார். இதுதான் உண்மை. இது அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்துள்ளார் மோடி. இதுபோல மக்களைக் கவருவதற்காக, மேலும் பல போலி என்கவுண்டர்களை அவர் நடத்துவார் என்று நான் திடமாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications