மன்மோகன் சிங்கை பேசாத பிரதமர் என்றார்களே, மோடி அதை விட மோசம்: ஈ.வி.கே.எஸ்.
திருச்சி: மன்மோகன் சிங்கை பேசாத பிரதமர் என்றார்கள். ஆனால் மோடியின் செயல்பாடுகள் அதைவிட மோசமாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராஜீவ் காந்தியை கொன்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளது தவறு. பிரதமராக இருந்தவரை கொலை செய்தவர்களை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்த அந்த 3 பேரையும் தூக்கில் போட வேண்டும். இந்த விஷயத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்போடு மத்திய அரசு செயல்பட வேண்டும்.

கடந்த ஆட்சியின்போது நடந்தது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பேசுவது நல்லது அல்ல. அவர் கடந்த 2 மாதமாக கருத்து தெரிவித்து வருவது அரசியல் நிர்பந்தமாக இருக்கலாம். ஆனால் கடந்த காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சரவையில் இலாக்காக்கள் ஒதுக்குவது பற்றி திமுக பல்வேறு நிர்பந்தங்கள் விதித்தது உண்மை.
மன்மோகன் சிங்கை பேசாத பிரதமர் என்றார்கள். ஆனால் தற்போது இருக்கும் பிரதமரின் செயல்கள் அவரை விட மிகவும் மோசமாக உள்ளது. சட்டசபையில் எந்த அமைச்சரும் தங்கள் துறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது இல்லை. முதல்வரே சட்டசபையின் 110 விதியின் கீழ் அறிவிக்கிறார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் தெரிவிக்காததும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய ஒரு காரணம். தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றிவிட்டால் கட்சி வெற்றி பெறும் என்று நினைப்பது சரி அல்ல. தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போதே கூட்டணி பற்றி பேசுவதற்கு அவசியம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications