அக்.18-ல் சென்னை வரும் நரேந்திர மோடியை ஜெ. சந்திப்பாரா?
சென்னை: சென்னைக்கு வரும் குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்திக்க வைக்க மும்முர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிமுகவும் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைக்காத போதும் தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடியுடன் நட்பு பாராட்டி வருபவர் முதல்வர் ஜெயலலிதா. தற்போது அவரை பிரதமர் வேட்பாளர் என்று பாஜக அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து உள்ளிட்ட எந்த ஒரு நட்பு முகத்தையும் முதல்வர் ஜெயலலிதா காட்டவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்று அதிமுகவினர் பிரசாரம் செய்து வருவதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் இடதுசாரிகளுடன் நெருக்கம் காட்டி வரும் ஜெயலலிதா, மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அதிமுகவை இடதுசாரிகளிடம் இருந்து விலக்கி பாஜகவுடன் இணைத்து வைக்கவும் சில லாபியிஸ்டுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக, பாஜக,மதிமுக ஆகியவற்றை ஓரணியில் சேர்ப்பது என்பது அவர்களின் இலக்கு.
இதன் ஒருகட்டமாகவே சென்னை வரும் நரேந்திர மோடியை ஜெயலலிதாவுடன் சந்தித்து பேச வைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். வரும் 18-ந் தேதி சென்னையில் அருண்சோரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மோடி கலந்து கொள்கிறார். அன்று எப்படியாவது இருவரையும் சந்திக்க வைத்துவிடுவதில் மும்முரம் காட்டுகிறது ஒருதரப்பு.












Click it and Unblock the Notifications